தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வேப்பிலை அள்ளிவீரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (55). இவர் தனது மாட்டுக்கு மக்காசோளம் தட்டு அறுப்பதற்காக ஜிட்டாண்ட அள்ளி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது நிலத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, வயலில் இருந்த மின் வயர் கோவிந்தசாமியின் காலில் சிக்கியுள்ளது. இதனால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மகேந்திரமங்கலம் காவல் துறையினர், கோவிந்தசாமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். விசாரணையில், காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்கம்பிகள் அமைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நிலத்தின் உரிமையாளர் தங்கவேலுவை கைதுசெய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பெரியகுளம் அருகே மூவர் மீது அடுத்தடுத்து பாய்ந்த மின்சாரம்: ஒருவர் மரணம்!