தருமபுரி மாவட்டம், கல்லாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சதீஸ்குமாருக்கும் பாஞ்சாலி என்பவருக்கும் இடையே கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சதீஸ்குமார் எந்த வேலைக்கும் போகாமால் மது அருந்திவிட்டு பாஞ்சாலியை அவரது அம்மாவீட்டிற்கு சென்று பணம் எடுத்துவரச் சொல்லி தகராறு செய்து வந்துள்ளார். இதனால், எட்டு மாத கர்ப்பிணியான பாஞ்சாலி நேற்று அவரது வீட்டில் தற்கொலை செய்ய முயற்சித்துளார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் பாஞ்சாலியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது இறப்புக்கு காரணமான சதீஸ்குமாரை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மருத்துவக்கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஞ்சாலியின் உடலை வாங்கவும் மறுத்தனர். இவர்களிடம் காவல்துறையினர், வட்டாட்சியர் ஆகியோர் சதீஸ்குமார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததனர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.