தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த சிக்கோன் என்பவரின் மகன் விக்னேஷ் (27). இவரும், திருச்சி முசிறி பகுதியைச் சேர்ந்த காஞ்சனா (26) என்பவரும் ஃபேஸ்புக் மூலம் காதலித்துவந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறிய மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.
இதனால் மனமுடைந்த காஞ்சனா கடந்த இரு தினங்களுக்கு முன் கத்தியால் கையை அறுத்துக் கொண்டுள்ளார். கையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.
கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த காஞ்சனா, நேற்று மாலை வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி காவல் துறையினர் காஞ்சனாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.