தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சிவாடி ஊராட்சியில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலத்தில் அமையவுள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிவாடி கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஏற்கனவே, சிவாடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் ரூ. 1,813 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்தது. இதற்கு சிவாடி கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் காரப்பரேஷன் லிமிடெட், சிவாடி கிராம நிலத்தில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவெடுத்துள்ளது. இவை அமைக்கப்பட்டால் சொந்த ஊரிலேயே மக்கள் அகதிகளாக மாற்றப்படுவார்கள். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த மக்களை சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
பின்னர் விவசாயிகள் மாவட்ட அட்சியரிடம் மனு அளித்து சென்றனர். போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் மல்லையன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், தமிழ்நாடு மலைவாழ் சங்க மாநில தலைவர் டில்லிபாபு, நிர்வாகிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் டாஸ்மாக் கடைக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...