தர்மபுரி: பாளையம்புதூர் அருகே உள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியரான துரைசாமி (85) - கோசலை (75) ஆகிய இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டில் சடலமாகக் கிடந்தனர். இதனையடுத்து தொப்பூர் காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில், "இறந்துபோன தம்பதிக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். சுமார் பத்து ஏக்கர் நிலத்தினைப் பங்குப் பிரித்துக் கொடுத்தது தொடர்பாக பிள்ளைகளுக்கும் முதியவர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்துவந்துள்ளது. 7.5 ஏக்கர் நிலத்தை மகன் துரைசாமி, அவரது மகன் சக்திவேல் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள 2.5 ஏக்கர் நிலத்தை மகள்கள் தங்களுக்கு எழுதித் தரும்படி கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் உடன்பிறந்த சகோதரிகளுக்கு நிலத்தில் பங்கு கொடுக்காமல் அபகரிக்கத் திட்டமிட்டுப் பெற்ற தாய் தந்தையை மகன் ஆனந்தன் (55), ஆனந்தனின் மகன்களான சக்திவேல் (33), மோகன் குமார் (24) ஆகிய மூவரும் முதியவர்களின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பூச்சி மருந்து குடித்து அவர்கள் தற்கொலைசெய்து கொண்டதுபோல நாடகம் நடத்தியது" தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மூவரையும் தொப்பூர் காவல் துறையினர் கைதுசெய்து தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.