கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கீழச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் சில நாள்களுக்கு முன் பெய்த பருவமழையின்போது 15 அடி அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நீர்தேக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முறையான மழை இல்லாததாலும், ஏரி முறையாக தூர்வாரப்படாததாலும் கரைகள் பலவீனமடைந்தன. 2018ஆம் ஆண்டு பெய்த மழையால் தண்ணீர் நிரம்பியது. அப்போது திடீரென அணை உள்வாங்கியதால் 20 மீட்டர் அளவிற்கு அணை சேதமடைந்து விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி அணையின் நிலை குறித்து அரசு அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.
பின்னர் அரசும் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அணையை பலப்படுத்தும் பணியைத் செய்தது. இதையடுத்து வடகிழக்குப் பருவமழையின்போது 15 அடி அளவிற்கு தண்ணீர் இருந்தது. தற்போது நான்கு நாள்களாக 2018இல் விரிசல் ஏற்பட்ட பகுதியின் வெளிப்புறம் தரைக்கு அடி பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கினாலும் முறையாக கரையை பலப்படுத்தாததே தண்ணீர் கசிவதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் அரசு அலுவலர்களும் பொதுப்பணித் துறையினரும் தலையிட்டு வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கரைகளை கான்கிரீட் கொண்டு அணை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பவானிசாகர் அணையின் நீர் அளவை கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல்