சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தொல் திருமாவளவன், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது; "கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் ஒரு அமைப்பை உருவாக்கி அதன்மூலம் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மற்றும் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் 500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருள்கள் வழங்கப்படுவருகிறது. அரசாங்கம் தன்னுடைய செலவை கட்டுப்படுத்துவதன் மூலம் நிதியை திரட்ட முடியும். தொகுதிக்கு ஒரு கை பம்பு அமைக்க வேண்டும் என்றால் கூட மாவட்ட ஆட்சியரை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது". எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கும்பல் கூட கூடாது என்று அரசாங்கம் ஒருபுறம் பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும் எனக் கூறி எல்லா தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்தபின்பு மதுக்கடைகளை திறப்பது என்பது கரோனா பரப்புவதற்கான திட்டம் என விமர்சித்துள்ளார். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுங்கட்சியினர் மதுக் கடைகளை மூடினால், எதிர்க்கட்சிகள் தானாகவே மதுபான ஆலைகளை மூடிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதையும் பார்க்க: மக்கள் நலனில் இல்லாத உத்வேகம் மதுக்கடைத் திறப்பில்- அரசை சாடிய கமல்