கடலூர் மாவட்டம் சிதம்பரம் கள்ளுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திபன் (20). இவரை சிதம்பரம் அண்ணாமலை தெரு வடகரை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (38) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திபன் கள்ளுக்கடை பகுதியில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணகுமாரின் கழுத்தை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அறுத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் கிருஷ்ணகுமார் அலறித்துடித்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது கிருஷ்ணகுமார் படுகாயமடைந்து காணப்பட்டார். இதற்கிடையே கார்த்திபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் படுகாயமடைந்த கிருஷ்ணகுமாரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிதம்பரம் நகர காவல் துறையினர், பின் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கார்த்திபனை மடக்கிப் பிடித்தனர். அவர் பெரியப்பாவிற்கு கரோனா தொற்று இருப்பதால் காவல்துறையினர் கார்த்திபனை தனிமைப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சந்தன மரம் கடத்தலை அம்பலப்படுத்திய பெண் சுட்டுகொலை!