கடலூர் மஞ்சகுப்பத்தில் அரசு உதவிபெறும் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2017-18ஆம் ஆண்டு பள்ளியில் படித்த மாணவர்கள் ஐந்து பேர் தங்களுக்கு அரசு வழங்ககூடிய மடிக்கணினி வழங்க வேண்டும் என்று பள்ளி முதல்வரிடம் சென்று கேட்டுள்ளனர்.
அதற்கு முதல்வர் மடிக்கணினி 2017-18ஆம் ஆண்டு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அரசு வழங்க உத்தரவிட்டால் வழங்குவதாக கூறி அவர்களை அனுப்பிவிட்டார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் சுற்றிய ஐந்து மாணவர்கள் சத்தமிட்டும் கூச்சலிட்டும் சென்றுள்ளனர். இதனை பார்த்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன், பள்ளி வளாகத்தில் சத்தமிட வேண்டாம் வெளியே போய் சத்தமிட்டுக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறியுள்ளார்.
அப்போது, அந்த ஐந்து மாணவர்களில் ஒருவன் உடற்கல்வி ஆசிரியரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த மாணவனை தாக்கியுள்ளார்.
இதனை உடனிருந்த மாணவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரியர் சந்திரமோகனை கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர் பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'முதல் சுதந்திரப்போர் நடந்தது வேலூரில் தான்' - தமிழ்நாடு ஆளுநர் பெருமிதம்!