நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து கடந்த 10ஆம் தேதி என்எல்சி நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.
இதுவரை நிர்வாகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருந்தாலும், இழுபறி நீடித்துவந்தது. என்எல்சி நெய்வேலி இல்லத்தில் சேர்மன் ராகேஷ் குமார் தலைமையில் நிரந்தர தொழிற்சங்கங்களான தொமுச, சிஐடியு, ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் தற்போது வாங்கும் சம்பளத்தைவிட மாதம் ரூ.8,000 கூடுதலாக அளிக்க வேண்டும், ஆண்டுக்கு 750 பேரை பணி நிரந்தரம் செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதுகுறித்து என்எல்சி சேர்மன் ராகேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இது வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் தொழிலாளர்கள் வாழ்க்கையில் நீண்ட காலமாகப் போராடிய அவர்களுக்கு நல்லதொரு தீர்வைக் கொடுக்கும் ” என்றார்.
மனிதவளத் துறை இயக்குநர் விக்ரமன் கூறும்போது, ”இந்த ஒப்பந்தம் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும். என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தியிருப்பதால் தொழிலாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆறு ஆண்டு காலத்திற்கு நீடிக்கும்” என்றார்.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்: கடையநல்லூரில் 6 வழக்குகள் பதிவு