கடலூர் மாவட்டம், உழவர் சந்தையருகேயுள்ள போக்குவரத்துத்துறை அலுவலகம் முன்பு, போக்குவரத்து கிளை மேலாளரின் அரசு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று(மார்ச் 23) காலை திடீரென வாகனத்தை காணவில்லை. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருடுபோன வாகனம் அவ்வழியாக வந்ததைக் கண்ட காவல் துறையினர், தடுத்து நிறுத்தி, வாகனத்தை திருடிச் சென்றவரைக் கைது செய்தனர். பின் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையின்போது, வாகனத்தை திருடிச் சென்றவர் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்றும்; இவர் தனியார் பேருந்து நடத்துநராக இருந்ததும் தெரியவந்தது.
இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், உல்லாசமாக ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக, அரசு வாகனத்தை திருடிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது என பரங்கிப்பேட்டை காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்து விட்டேன்!