கடலூர்: தமிழ்நாட்டில் கிராம இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் எனப் பலரின் தொடர் முயற்சியால் இன்று கிராம சபை குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவர்களது முயற்சிகளுக்கெல்லாம் பெரும் நம்பிக்கை அளிக்கும் விதமாக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமைந்துள்ளது.
அதாவது ஒரு கிராம ஊராட்சி தனது தேவைக்கேற்ப ஒரு ஆண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் கிராமசபைக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் எனவும், அதற்கு அரசின் ஒப்புதலையோ மாவட்ட ஆட்சியரின் அனுமதியையோ பெறத் தேவையில்லை என்றும் ஏற்கெனவே தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திலிருந்த வழிமுறைகளை உறுதிப்படுத்தியது.
![Due to the continuous efforts of many village youth social activists and women Grama Panchayat Grama Sabha Rajendrapattinam Grama Panchayat கிராம சபை ராஜேந்திரபட்டினம் கடலூர் செய்திகள் கடலூர் ராஜேந்திரபட்டினம் கிராம சபை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13515856_gra.jpg)
வெற்றி கண்ட முயற்சி; ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்
கிராமசபைக் கூட்டம் ஆண்டுக்கு நான்கு நாள்களுக்கு மட்டும்தான் நடத்தப்படவேண்டும் என்று செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலையை மாற்றும் வகையில் அமைந்துள்ள இந்த உத்தரவு, உள்ளாட்சியை வலுப்படுத்தும் பணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இதனை நடைமுறைப்படுத்தி, கிராமசபை விதிகளைப் பின்பற்றி ராஜேந்திரபட்டினம் கிராம ஊராட்சியில் நேற்று (அக்.31) மக்கள் பங்கேற்போடு ஊராட்சி ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் விதமாகக் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மகளிர், இளைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
![Due to the continuous efforts of many village youth social activists and women Grama Panchayat Grama Sabha Rajendrapattinam Grama Panchayat கிராம சபை ராஜேந்திரபட்டினம் கடலூர் செய்திகள் கடலூர் ராஜேந்திரபட்டினம் கிராம சபை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13515856_gs.jpg)
இதில் பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் பரவலாகப் பங்கேற்றிருந்தனர். பின்னர் அவர்களது கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஊராட்சிமன்ற பிரதிநிதிகள், ஊராட்சித் தலைவர்கள் ஆகியோர் பதிலளித்தனர்.
தொடர்ந்து, ராஜேந்திரப்பட்டினம் கிராமசபை மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து இது போன்று இன்னும் பல கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பு முதல் விவசாயம் வரை: மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோ ஷனா!