கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு விதைப்பு, நடவு மற்றும் அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான இடுபொருட்கள், விவசாய தொழிலாளர்கள் நகர்வு மற்றும் பண்ணைக் கருவிகள் நகர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று வேளாண்மை விளை பொருட்களை சந்தைக்கும் தொழிற்சாலைக்கும் எடுத்த செல்ல சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகத்திற்கு தொலைபேசியிலோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்தால் அதனை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றுத் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே இதற்காக விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையில்லை.
அதே போன்று கடலூர் மாவட்டத்தில் உரிமம் வழங்கப்பட்டுள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் எவ்வித தடையுமின்றி கிடைக்கும்.
இந்த விற்பனை நிலையங்களில் தினசரி காலை 8.00 மணி முதல் 2.30 மணி வரை திறந்து வைத்து இடுபொருட்கள் விற்பனை செய்யப்படும்.
இந்த விற்பனை நிலையங்களில் தினசரி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொள்முதல் செய்ய வரும் விவசாயிகள் கூட்டமாக இல்லாமல் சமூக இடைவெளி குறைந்தபட்சம் ஒரு மீட்டர் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் உரிய ஒத்துழைப்பு தந்து தங்கள் சாகுபடிக்கு தேவையான இடுபொருள்களை காலத்தே பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது" என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: கரோனா ஆபத்திலும் அயராது உழைக்கும் அலுவலர்கள்