புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி முரளி என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த சுந்தர், அமரன் (எ) அமர்நாத் ஜெயக்குமார் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். சுந்தர், அமரன் ஆகியோரை தவிர மற்றவர்கள் பிணையில் வெளியே வந்தனர். சுமார் இரண்டு ஆண்டு சுந்தர், அமரன் மத்திய சிறையில் இருந்தனர்.
இந்த நிலையில் முரளி கொலை வழக்கு தொடர்பான விசாரணை இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி, குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். சுந்தர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால், அவரால் வெளியே வர முடியவில்லை.
அமரன் (எ) அமர்நாத் மட்டும் பிணையில் வெளியே வந்தார். முரளியின் ஆதரவாளர்களால் அமரன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், காலாப்பட்டு மத்திய சிறையிலிருந்து தனது உறவினர்கள் மூலம் காரில் தஞ்சாவூரிலிருக்கும் சகோதரி வீட்டிற்கு அமரன் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழி என்ற இடத்தில் டாஸ்மாக்கில் மது அருந்த சென்றபோது பின்புறமாக காரில் வந்த கும்பல் ஒன்று அமரனை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ், காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வடலூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:
விமான நிலையத்தில் ஆள்கடத்தல் கும்பலை துப்பாக்கி முனையில் மடக்கிய காவல் துறை!