உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் போர்க்கால அடிப்படையில் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
மேலும் சில இடங்களில் முழு ஊரடங்கு பிறப்பித்ததும், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் நேற்று( ஜூலை 13) வரை கரோனா தொற்றால் 1, 547 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ( ஜூலை 14) மேலும் 13 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,560 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாச்சலம் சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சத்தான உணவுகள் வழங்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் நேற்று( ஜூலை 13) வரை 1, 129 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இன்று ( ஜூலை 14) மேலும் 40 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து 1, 169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.