உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா பரவல், அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம், தமிழ்நாடு அளவில் பாதிப்பில் 19ஆவது இடத்தில் உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறை சார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கடலூரில் உள்ள மருத்துவ முகாம், நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுவருகிறது. இதற்காக 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் இன்று (ஜூலை 29) ஒரேநாளில் மட்டும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 120 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 788ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, அதிக பாதிப்புள்ள பகுதிகளான கடலூர், பண்ரூட்டி, விருத்தாச்சலம், சிதம்பரம் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதுவரை கடலூரில் 2 ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 718 பேர் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள ஆயிரத்து 45 பேர் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.