மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதைத் திரும்பப் பெறக் கோரியும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கடந்த 2ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு கோடி பேரிடம் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு அதை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கடலூரில் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் திருமாவளவன் உள்பட 310 பேர் மீது கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி கையெழுத்து இயக்கம், பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி திருமாவளவன், முன்னாள் அமைச்சர்கள் கணேசன், சபா ராஜேந்திரன் உள்பட 300 பேர் மீது நெய்வேலி டவுன்ஷிப் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் நேற்று முன்தினம் மாலை மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் மனிதநேய ஜனநாயக கட்சி, முஸ்லிமா அஷ்ஷூரா அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாகக் கூறி 250 பேர் மீது கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தேசியளவு டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்: முதலமைச்சர் வாழ்த்து