நடிகர் விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான 'பிகில்' திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து வரி ஏய்ப்பு புகார் காரணமாக 'பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் வருமான வரித்துறையினரின் இந்த சோதனையின் காரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துவரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முந்தைய நாள் இரவு 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் நெய்வேலிக்குச் சென்ற வருமான வரித்துறையினர், இரவு முழுவதும் விஜய்யிடம் விசாரணை நடத்தினர்.
வருமான வரித்துறையினரின் சோதனையில் ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான சென்னை, மதுரையில் உள்ள வீடுகளிலிருந்து இதுவரை ரூ. 77 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் விஜய் வீட்டிலிருந்து பணம் எதுவும் கைபற்றப்படவில்லை எனவும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து நெய்வேலியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 'மாஸ்டர்' படப்பிடிப்புக்குச் சென்று மீண்டும் நடிகர் விஜய் படப்பிடிப்பில் பங்கேற்றார்.
இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில், எப்படி படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தார்கள் என்று சுமார் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் இரண்டாவது நிலக்கரி சுரங்க நுழைவுவாயிலில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!