உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், தமிழ்நாட்டிலும் கோரத்தாண்டவமாடி வருகிறது. அதன் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசால் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கடலூரில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462ஆக இருந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி சென்னை ஆலந்தூரில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலராகப் பணியாற்றி வந்த ஒருவர் குடும்பத்துடன் சொந்த ஊரான வண்டிப்பாளையம் வந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் காவலர், அவருடைய ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட மூவருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதேபோல் சென்னையில் இருந்து பச்சையாங்குப்பம் பகுதிக்கு வந்த பெண் ஒருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பண்ருட்டி உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில், ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆறு பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடலூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 468ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: அசாமில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!