கோவை: அன்னூர் அடுத்த பொங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரங்கசாமி, வேலை நிமித்தமாக அன்னூரில் இருந்து புளியம்பட்டி செல்வதற்காக என்.எம்.எஸ்.எஸ்.ஆர்.டி என்ற தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.
பயணச்சீட்டு வாங்கும்போது ரங்கசாமி நடத்துனரிடம் சரியான சில்லரை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நடத்துனர் திட்டியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், சத்தியமங்கலம் சாலையில் பசூர் அருகே பேருந்தை நிறுத்திய ஓட்டுனர், நடத்துனர் உடன் இணைந்து ரங்கசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது கீழே இறங்கிய ரங்கசாமியை இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் ரங்கசாமிக்கு கழுத்துப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை வீடியோ எடுத்த வாகன ஓட்டி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அதிவேகமாக இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவது, பாதுகாப்பின்றி படியில் தொங்கி கொண்டு செல்லும் அளவுக்கு, கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், தனியார் பேருந்து ஊழியர்கள் சில்லரைக்காக பயணி ஒருவரை தாக்கிய சம்பவம் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அரசு பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்களிடம் விசாரணை