வால்பாறை குரங்கு முடி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாகும், இங்கு காட்டுமாடு, வரிப்புலி, சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு தனியார் எஸ்டேட் அலுவலகம் பின்புறம் சிறுத்தைப்புலி பகலில் வனத்தை விட்டு வெளியேறி நடந்து சென்றதை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பார்த்துள்ளனர்.
குரங்கு முடி அருகில் உள்ள மலைநாடு தனியார் எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளி முகமது அவரது மாட்டை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடு நேற்று மாலை இறந்துகிடந்தது.
மாட்டை தேடிச்சென்ற முகமது, மாடு ரத்தக் காயங்களோடு இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த மானாம்பள்ளி வனத்துறையினர், மாட்டை சிறுத்தைப்புலி கொன்றுள்ளது என உறுதி செய்துள்ளனர்.. இந்நிகழ்வுக்குப் பின்பு பொதுமக்கள் இரவில் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.