கோவை: காந்திபுரம் பகுதி சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைக்கப்பட்டிருந்தது. கடந்த மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, கொடியேற்றுவதற்காக கட்சியைச் சேர்ந்த சிலர், கொடிக்கம்பத்தை வண்ணம் பூசி தயார் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த காட்டூர் காவல்நிலைய ஆய்வாளர் லதா தலைமையிலான போலீசார், கொடிக்கம்பத்தை அகற்றுமாறு எச்சரித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து தற்காலிகமாக கொடிக்கம்பத்தை கட்சி ஊழியர்கள் அகற்றிய நிலையில், இன்று காலை அதே பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் ஆகியோருடன் அப்பகுதியில் திரண்ட அக்கட்சியினர், 40 ஆண்டுகளாக இருந்த கொடிக்கம்பத்தை மீண்டும் அங்கேயே நட முயன்றனர்.
தகவலறிந்து மீண்டும் அங்கு வந்த போலீசார், இதற்கு மறுப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் கட்சியினர், அப்பகுதியில் மீண்டும் கட்சிக் கொடிக்கம்பத்தை நட்டு வைத்துவிட்டு, அங்கிருந்து சென்றனர். இதையடுத்து போலீசார் அங்கு சிறிது நேரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. காவல்துறையினரின் இந்த செயல் அவ்வமைப்புகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேலூரில் 75 கொடி கம்பங்களில் கொடியேற்றி மக்கள் கொண்டாட்டம்