கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டி, ஊராட்சிக்கு உட்பட்ட சேரன் நகர் முதல் லட்சுமி நகர், நடுபுனி முதல் மகாலட்சுமி நகர் வரை புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன், 'குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்று முதலமைச்சர் தெரிவித்தும், திமுக தலைவர் ஸ்டாலின் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறி, அரசியல் லாபத்திற்காக மக்களிடம் பீதியைக் கிளப்பி விடுகிறார். இது புஷ்வானமாக போய்விடும்.
1998ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது இஸ்லாமிய மக்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அப்போது பாதுகாப்பு தராமல் அமைதியாக இருந்துவிட்டு இப்போது மக்களைத் தூண்டி விடுகிறார். தமிழ்நாட்டில் மதப் பாகுபாடுகளை உருவாக்கி, பதவி ஆசைக்காக ஸ்டாலின் மதக் கலவரத்தைத் தூண்டி விடுகிறார்' என குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவு!