கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை நேற்று (ஜனவரி 19) சந்தித்தார். அப்போது அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஓபிஎஸ் என்ன சொல்கிறார் என்பதற்காக காத்திருக்கிறோம்.
இரட்டை இலைக்கு சொந்தக்காரர் ஓபிஎஸ் மட்டுமே. அதிமுக கூட்டணி தொடர்பாக பாஜக, ஓபிஎஸ் உடன் பேசி தான் முடிவு செய்வார்கள். சொந்த தொகுதியில் நின்று தோல்வி கண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் அனாதையாகி விட்டார். அவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லை. திரை மறைவில் அதிமுகவை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவே, ஓபிஎஸ் உடன் இருக்கிறேன்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை விட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புத்திசாலி, கள நிலவரம் தெரிந்தவர். இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டதால், அவருக்கு கட்சியில் எந்த பதவியும் இல்லை. அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி உடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்றது ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி.. ஜி.கே.வாசன் அறிவிப்பு..