கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற அம்மன் கோயில்களில், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குண்டம் திருவிழாவுக்கு முன்னர் நடைபெறும் மயான பூஜைக்காக நேற்று நள்ளிரவு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர். அங்கு சயன கோலத்தில், மாசாணியம்மனின் உருவம் மயான மண்ணால் உருவாக்கப்பட்டிருந்தது.
பின்னர், அதிகாலை 1 மணியளவில் மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருவுருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. இதையடுத்து, மயான அருளாளி அம்மனின் மண் உருவத்தைச் சிதைத்து, எலும்பை கவ்வியப்படியே பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.
பின்னர், மயான பூஜையானது அதிகாலை 2 மணியளவில் முடிவடைந்தது. மேலும், வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் என நூற்றிற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு