கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் டாப்சிலிப்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வனத்துறை சார்பில் பாராமரிக்கப்பட்டுவரும் சின்னதம்பி உட்பட 18 வளர்ப்பு யானைகள் கோழிகமுத்தி முகாமிலிருந்து பாப்சிலிப்புக்கு அழைத்து வரப்பட்டு மாலை அணிவித்து அணிவகுத்து நிற்கவைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் யானைக்கு பிடித்த வாழைப்பழம், கரும்பு, தேங்காய், பொங்கல் ஆகியவை உணவாக வழங்கப்பட்டன. இதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டு ரசித்ததோடு, அவர்களும் யானைகளுக்கு கரும்பு, வாழைப்பழம் ஆகியவை கொடுத்து மகிழ்ந்தனர்.
டாப்சிலிப்பில் உள்ள புல்மலையில் யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்து, சுற்றுலாப் பயணிகளைப் பார்த்து ஒரே நேரத்தில் தும்பிக்கைகளைத் தூக்கியபடி பிளிறின. இந்தக் காட்சி அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளை வியப்பில் அழ்த்தியது. அதனைச் சுற்றுலாப் பயணிகள் தங்களது கைபேசி மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தைத்திருநாளில் யானைகளைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காணும் பொங்கலுக்காக குவிந்த சுற்றுலா பயணிகள்- களைகட்டும் சித்தன்னவாசல்.!