கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் செயல்படுகிறது. இங்கு கொங்கல் நகரம் பண்ணைக் கிணறு பகுதியை சேர்ந்த அமர்நாத் என்பவரின் விவசாய நிலத்தை விஜயசேகர் விலைக்கு வாங்கி உள்ளார். மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்ற பொள்ளாச்சி மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அலுவலக கணக்கு மேற்பார்வையாளர் அகஸ்டின் கிறிஸ்டோபர் இரண்டாயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் சசி லேகா தலைமையில் பத்து பேர் கொண்ட காவல்துறையினர், விவசாயிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி கண்காணித்தனர். பின்னர் ரூபாய் நோட்டுக்களை மின் கணக்கு மேற்பார்வையாளர் லஞ்சமாக பெற முயன்ற போது மறைந்திருந்த காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கணக்கு மேற்பார்வையாளரை கைது செய்தனர்.