நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பகுதியைச் சேர்ந்த பழனியாண்டியின் மகன் சிவபெருமாள். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன்பு சிவ பெருமாள் தனது வீட்டின் அருகிலுள்ள சமுதாய கூட்டத்தின் மேற்கூரையில் நின்றபடி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில், சிவபெருமாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின்னர் அங்கு அவரை பரிசோதித்ததில், மூளைச்சாவு அடைந்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்க முன்வந்தனர். இதன்மூலம் கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக உடல் உறுப்பு தானம் பெறப்பட்டது.
அங்கு, சிவபெருமாளின் கல்லீரல் மற்றும் சீறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டன. தொடர்ந்து அவரது கல்லீரல் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலத்திலுள்ள மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. மேலும், இவரது கண்களை தானமாகப் பெறவும் மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை செய்துவருகிறது.
இதையும் படிங்க: ஆசிரியர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!