கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம்.
இந்நிலையில் காரமடை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வெள்ளியங்காடு பகுதியில் உணவு தேடி வந்த பெண் யானை கடந்த ஒரு வாரமாக வாயில் காயத்துடன் சுற்றித் திரிந்தது. அந்த யானை உடல் மெலிந்த நிலையில், மிகவும் சோர்வுடன் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் அந்த யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த யானையின் வாய்ப்பகுதியில் காயங்கள் இருப்பதால், தீவணங்கள் உண்ண முடியாமலும், தண்ணீர் அருந்த முடியாமலும் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த யானையை கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று (மார்ச் 17) காலை செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண் காட்டு யானைக்கு, வனத்துறை மருத்துவர் சுகுமார் மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர் வனத்துறையினர் யானையின் கழுத்திலும், பின்னங்கால்களிலும் கயிறுகளை கட்டி யானையை நிறுத்தினர். இதற்கு உதவியாக கும்கி யானை சின்னத்தம்பி காட்டு யானையை பிடிக்க பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
யானையின் உடல்நிலையை சோதித்த மருத்துவர் சுகுமார் கூறுகையில், “பெண் யானையின் நாக்கின் மையப் பகுதியில் வெட்டுக்காயம் உள்ளது. இதனால் கடந்த நான்கு வாரங்களாக உணவு சாப்பிட முடியாமல் யானை சுற்றி திரிந்து வந்துள்ளது. தற்போது யானைக்கு சிகிச்சை அளிப்பதே முதல் பணி. யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அந்த யானைக்கு முதற்கட்டமாக குளுக்கோஸ், ஊட்டச்சத்து மருந்துகள் உள்ளிட்டவை வழங்கி சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அந்த யானை டாப்சிலிப் அருகேவுள்ள வரகழியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூண்டில் அடைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்” என்றார்.
இது குறித்து வனத்துறை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கூறுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் காயம் அதிகமாக இருந்ததால் அதனை கூண்டில் வைத்து சில வாரங்கள் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி அதனை டாப்ஸ்லிப் வரகழியாறு முகாமுக்கு கொண்டு சென்று அதற்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கும்கி யானைகளின் தலைவன் ‘கலீம்’ - தோல்வியே சந்திக்காத கலீமின் கதை!