கோயம்புத்தூர்: சிவக்குமார் (41). இவரது மனைவி கவிதா (37). இந்த தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக மனைவி கவிதா தனது கணவர் மீது புகார் தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம் 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (மார்ச் 23) வழக்கு விசாரணைக்காக கணவன் மனைவி இருவரும் வந்திருந்த நிலையில் இருவரும் காத்திருப்பாளார்கள் பகுதியில் காத்திருந்துள்ளனர். அப்போது சிவக்குமார் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதாவின் மீது வீசியுள்ளார். அது கவிதாவின் உடலில் பட்டது. உடனடியாக அருகில் இருந்த வழக்கறிஞர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதனிடையே சிவக்குமாரை அருகில் இருந்த பிற வழக்கறிஞர்கள் தாக்க முற்பட்டனர்.
இதற்கிடையே அங்கிருந்த காவலர்கள் சிவக்குமாரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே இது போன்று துணிச்சலுடன் வந்து ஆசிட் வீசிய நபரை ஏதற்காக பாதுகாப்பு கொடுத்து அழைத்து சொல்கிறீர்கள் என காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு சிவக்குமாரை தாக்க முற்பட்டனர்.
இருப்பினும் காவல் துறையினர் சிவக்குமாரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பாதுகாப்பு வழங்கி காவல் துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ் ஆய்வு மேற்கொண்டார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிவக்குமாரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரையும் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து இருவரையும் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ், நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த கோவை மாநகர காவல் துணை ஆணையாளர், சந்தீஸ், பெண்ணுக்கு 80 விழுக்காடு உடல் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறிய அவர், விசாரணைக்கு பிறகே முழு தகவல்கள் தெரிய வரும் என தெரிவித்தார்.
ஆசிட் வீச்சு என்பது மிகப்பெரிய குற்றச்செயல் என தெரிவித்த அவர், ஆசிட்டின் தன்மை குறித்து தடயவியல் சோதனை மேற்கொண்ட பிறகே தெரியவரும் என்றார். மேலும் அந்த ஆசிட்டை தண்ணீர் பாட்டிலில் எடுத்து வந்ததால், எளிதில் கண்டறியப்படாமல் போனதாக தெரிகிறது என்றார். மேலும் கூடுதல் விவரங்கள் விசாரணைக்கு பின்பே தெரியவரும் என தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த நிலையில் நீதிமன்றத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பாட்டிகளை கொன்று சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ குற்றவாளிகள்: பகீர் தகவல்கள்!