கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள சிறுமுகை வனச்சரகத்தில் பெண் யானை ஒன்று சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
மேலும் யானைகளின் வலசை பாதையில் சிறுமுகை வனச்சரகம் முக்கிய வழித்தடமாக உள்ளதால் யானைகளின் நடமாட்டம் எப்போதும் காணப்படும். இதனிடையே, தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால் அருகில் உள்ள கேரளா வனப்பகுதியில் இருந்தும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்தும் வந்துள்ள ஏராளமான யானைகள் சிறுமுகை வனச்சரகம், பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் சிறுமுகை கூத்தாமண்டி அடுத்த மூலையூர் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூலையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில், இருப்பதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள், இது குறித்து சிறுமுகை வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
பின்னர், அங்கு வந்த சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில் உயிரிழந்தது பெண் காட்டு யானை என்பதும் அதற்கு 5 வயது இருக்கும் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, யானையின் உடல் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதோடு, அதன் முக்கிய உடல் பாகங்கள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.
இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில், 'உயிரிழந்தது பெண் யானை என்பதும் உயிரிழப்பிற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். உடல்நலக்குறைவால் இந்த யானை உயிரிழந்திருக்கலாம் எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, அதற்கான முழுக்காரணம் தெரிய வரும் எனக் கூறினர். சமீபகாலமாக, கோவை வனக்கோட்டத்தில் யானைகள் உயிரிழப்பது சூழலியல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பனங்கிழங்கினை அறுவடை செய்து அசத்திய பள்ளிக் குழந்தைகள்..!