கோவையிலிருந்து பாலக்காடு வரை செல்லக்கூடிய ரயில் பாதை சுமார் 24 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் வன விலங்குகள் தண்டவாளத்தைக் கடக்கும் என்பதால் ரயில்கள் மிகக்குறைந்த வேகத்தில் மட்டுமே செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், குறிப்பிட்ட நேரங்களைத் தவிர அனைத்து ரயில்களும் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறிவந்தனர். கடந்த 17 ஆண்டுகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததால், கேரள மாநிலம் கஞ்சிகோடு வரை 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டுவந்தன.
இந்நிலையில், நேற்று இரவு தமிழ்நாடு - கேரள எல்லையான ஆரங்கோட்டுகுளம்பு என்ற இடத்தில் இரவு 12.30 மணி அளவில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளது. அப்போது கேரளாவிலிருந்து அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில், யானை மீது மோதியது. இதில் யானை சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு துடிதுடித்து உயிரிழந்தது.
நான்கு மாதத்தில் இரண்டு யானைகள் உயிரிழப்பு
சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் இரவு செல்லாமல் காலையில் சென்று கேரள வனத்துறையினர், ரயில்வேத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி கேரளாவிலிருந்து வந்த ரயில் மோதி இப்பகுதியில் 10 வயதுள்ள ஆண் யானை உயிரிழந்துள்ள நிலையில், மீண்டும் அதே பகுதியில் ரயில் மோதி மற்றொரு யானை உயிரிழந்துள்ளது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
17 ஆண்டுகளில் 28 யானைகள் உயிரிழப்பு
இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், கோவையிலிருந்து பாலக்காடு வரை உள்ள வனப்பகுதி யானைகள் காப்பகமாக உள்ளதாகவும், 2002ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 28 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர். ரயில் ஓட்டுநர்கள் மித வேகத்தைக் கடைப்பிடிப்பதில்லை எனவும், இதனால் வன விலங்குகள் அடிபட்டு இறப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: உயிரிழந்த குட்டி யானை... மீட்க போராடும் தாய்... நெகிழ்ந்த மக்கள்...!