கோயம்புத்தூர் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியம் கோட்டூர் பகுதியில் கிழக்கு திமுக ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதில் கலந்துகொண்ட அப்பகுதி மக்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதாகவும், குடிநீர் தூய்மையற்று இருப்பதாகவும், கடந்த 25 வருடங்களாக ஒரே பகுதியில் வாழும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
இதையடுத்து பேசிய பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், “தொடர்ந்து ஆளுகின்ற அதிமுக அரசு எல்லா வழிகளிலும் ஊழல் செய்வதிலேயே முக்கிய குறிக்கோளாக செயல்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் மட்டுமே” என்றார்.
இதனையடுத்து கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் ஆகியோர் அலட்சியமாக செயல்படும் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: 'பேரம் முடிந்தவுடன் தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பிரதமர் பேசுவார்'