கோவை மாவட்டம், சூலூர் விமான படை தளத்தின் அருகில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. சூலூர் விமானப் படை ஊழியர்கள், வீரர்களின் குழந்தைகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை அந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் பீகாரைச் சேர்ந்த மாணவரை ஆசிரியர்கள் கண்டித்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், வியாழக்கிழமை ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகக் கூறி, கோவை அரசு மருத்துவமனையில் மாணவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது பள்ளி வகுப்பறையில் சக மாணவர்களை வெளியேற்றி விட்டு தன்னை முதல்வரும், ஆசிரியைகள் சிலரும் சேர்த்து தாக்கியதாகவும், அதை வீடியோவாகப் பதிவு செய்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாகவும் சூலூர் காவல்நிலையத்தில் அவர் புகார் தெரிவித்து இருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, நேற்று பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதற்காக 11ஆம் வகுப்பு மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, 11ஆம் வகுப்பு மாணவரும், அவரது 9ஆம் வகுப்பு படிக்கும் தம்பியும் சேர்ந்து முதல்வரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்களின் பெற்றோர்கள் ஹரே ராம் சிங், சீமா குமாரி மீது பள்ளியின் பொறுப்பு முதல்வர் நாகேந்திரன் புகார் அளித்தார்.
இதன் பேரில் சூலூர் விமான படை தளத்தில் ஜூனியர் வாரண்ட் அலுவலராகப் பணியாற்றி வரும் ஹரே ராம் சிங் உள்ளிட்ட நான்கு பேர் மீது மூன்று பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: