உலகளாவிய பெருந்தொற்றாக மாறி இருக்கும் கரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியாவில் கடந்த 25 நாள்களாகத் தீவிரமடைந்துவருகிறது. அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், அதன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முனைப்போடு செயலாற்றிவருகின்றன. காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்து துறைகளும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.
பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது, மருத்துவ முகாம்கள் அமைத்து தொற்று கண்டறிதல் சோதனை மேற்கொள்வது, தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு மனவள, உடல்நல ஆலோசனைகள் வழங்குவது, ஏழை எளிய மக்களுக்கு உணவுப்பொருள்கள் உள்ளிட்டவற்றை வீட்டிற்கே கொண்டுசேர்ப்பது உள்ளிட்ட பணிகள் துரிதகதியில் சீராக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அரசின் இந்த முன்னெச்சரிக்கை பணிகளுக்காகச் சமூகத்தின் பல பிரிவினரும் தங்களாலான உதவிகளைப் புரிந்துவருகின்றனர். சாலையில் உள்ள ஆதரவற்றோர், மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவுப்பொருள்களை வழங்கி அவர்களின் பசியைப் போக்குகின்றனர்.
மனிதர்களுக்கு மட்டுமல்லாது, சாலையோரங்களில் உள்ள கால்நடைகளுக்கு உணவு கிடைக்காததால் அப்பகுதிகளில் உள்ளவர்கள் ஆங்காங்கே உணவு அளிக்கிறார்கள்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிபட்ட நிலையில் பறக்க முடியாமல் காக்கை ஒன்று நீண்ட நேரம் கரைத்தப்படியே சுற்றியது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பந்தய சாலை காவலர் சந்திரன் இதனைக் கவனித்துள்ளார். சாலையில் சுற்றித் திரிந்த அந்தக் காக்கையை பத்திரமாக மீட்ட அவர், அதற்கு உணவு, தண்ணீர் வைத்து பராமரித்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் தங்களது செல்போனில் பதிவுசெய்ததோடு மட்டுமல்லாமல் காக்கைக்கு உணவு வழங்கிய காவலர் சந்திரனின் உயிர்நேயத்தைப் பாராட்டிச் சென்றனர்.
இதையும் படிங்க : சாலையில் ஓவியம் வரைந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல் துறையினர்