தமிழ்நாடு காவல் துறைக்கு உளவுத் துறை நேற்று ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது. அதில், லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியதாகத் தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் ஆறு பேரும் கோவையில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தது. இவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும், மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் என்றும் தகவல் அளித்தது.
மேலும் இவர்கள் அனைவரும் இந்துக்களை போன்று உருமாறி கோவையில் உலாவிவருவதாகவும் தகவல் கொடுத்தது. இதனையடுத்து கோவையிலுள்ள ரயில் நிலையம், விமான நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறை பாதுகாப்பை அதிகரித்தது. கோவை நகர் முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை காவல் ஆணையர் சுமித் சரண், ''ஆறு பயங்கரவாதிகள் கோவை நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதைld தொடர்ந்து போதுமான அளவு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். கோவை மாநகரம் முழுவதும் சுமார் இரண்டாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆகையால் மக்கள் கவலைப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார். கோவை மாநகர காவல் துறை சார்பில் எந்தவித புகைப்படமும் வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.