கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகிய இடத்தை தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் ராம் சங்கர் கத்தாரி, துணைத் தலைவர் முருகன் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் உடனிருந்தனர். விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், "17 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க வந்திருக்கிறோம். இந்தப் பகுதியில் மீதமுள்ள சுற்றுச்சுவர்களை முழுமையாக இடிக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள 10 லட்சம் நிவாரணத்தில் தற்போது நான்கு லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ஆறு லட்சத்தை நாளைக்குள் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
ஓரு வாரத்திற்குள் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்கவும் அறிவுறுத்தியிருக்கிறோம். கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
இது தீண்டாமை சுவரா என்பது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களில் இது போன்ற சுவர்கள் இருப்பது குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும் இது குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் முருகன் உறுதிபட கூறினார்.
இதையும் படிங்க: 'தீண்டாமை சுவர் விவகாரத்தில் அரசுதான் முதல் குற்றவாளி' - எவிடன்ஸ் கதிர்