கோயம்புத்தூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 30ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார். தனது மேல்படிப்பிற்காக 12 நாட்கள் அவர் அமெரிக்காவில் தங்கி இருந்தார். அப்போது இந்தியர்கள் பலரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு சென்ற அண்ணாமலை நேற்றைய (அக்.14) தினம் நாடு திரும்பினார். இதனிடையே, அவர் நாடு திரும்பி உள்ள நிலையில், அவரை வரவேற்கும் விதமாக கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் ஆளுயர போஸ்டர்கள் ஒட்டப்படுள்ளன.
அதில், அண்ணாமலையின் படத்திற்கு கீழ் "உலகம் போற்றும் தலைவன் வருக, வருக வெல்க, வெல்க" என அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் கோவை மாநகரின் முக்கிய இடங்களான ரயில் நிலையம், உக்கடம், லங்கா கார்னர் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. அதே சமயம், இந்த ஆளுயர போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் சுவர் மட்டுமல்லாது தரைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு மற்றும் கோவை மாநகர ஆணையாளர் உத்தரவை அவமதிக்கும் படியாக, தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் போஸ்டர்கள் ஒட்டி வருவது பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எவ்வளவு முறை எச்சரித்தாலும் உத்தரவுகளை துச்சமாக கருதி, சீர்மிகு கோவையின் அழகை சீரழிக்கும் அரசியல் கட்சிகள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சரின் வீட்டு முன் கதறி அழுத நடிகை