கோவை மாவட்டம், கணபதி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தற்போதுள்ள எடப்பாடி பழனிசாமி அரசு, அடிமை அரசு. பாஜகவின் கட்டளைகளுக்கு அதிமுக கட்டுப்பட்டு நடக்கிறது. அடிமை அரசிடமிருந்து மீள தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு விவசாயிகள் நலனை பாதிக்கும் வேளாண் திருத்த சட்டங்களுக்கு அதிமுக எம்பிக்கள் ஆதரவளித்தனர். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு எதிராக அதிமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவும் ஆர்எஸ்எஸும் மதத்தின் பெயரால் மக்களை பிரித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பாஜக தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கிறது. நாம் அதிமுகவிற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜக, ஆர்எஸ்எஸுக்கு அளிக்கும் வாக்குகளாக மாறும். மக்கள் விரோத மோடி, எடப்பாடி அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். பாஜகவிற்கு வால் பிடிக்கும் அதிமுக, அண்ணா, திராவிடம் ஆகிய பெயர்களைக் கைவிட வேண்டும். இந்தத் தேர்தலில் மதசார்பற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்தப் பொதுக்கூட்ட பரப்புரையில் மாநிலங்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலர் ராமமூர்த்தி, வேட்பாளர்கள் மயூரா ஜெயகுமார், சண்முகசுந்தரம், பையா (எ) கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.