கோவை: மேட்டுப்பாளையம் அருகே சோமையனூரைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மனைவி மகாலட்சுமி. தம்பதிக்கு ஒரு மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சரவணகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி கணுவாய்ப்பாளையத்தில் உள்ள தனது தாய் நாகமணியுடன் வசித்துவந்தார். மகாலட்சுமி அடிக்கடி அலைபேசியில் பல்வேறு நபர்களிடம் பேசிக் கொண்டு, அவரது பிள்ளைகளைச் சரிவர கவனிக்கவில்லை என நாகமணி ஆத்திரமடைந்துள்ளார்.
பல்வேறு நபர்களுடன் மண பந்தத்தைத் தாண்டிய உறவு
அலைபேசி பேச்சு தொடர்ந்து வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. மேலும் பல்வேறு நபர்களிடம் மகாலட்சுமிக்குத் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையில், மகாலட்சுமி தனது தாயைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த நாகமணி, தனது அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று (ஜூலை 11) மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
தலையில் ஆட்டுக்கல்லைப் போட்டு கொலை
வீடு திரும்பிய பின்னரும் இருவருக்குமிடையே வாக்குவாதம் எழ, சிறிது நேரத்திற்குப் பின்னர் இருவரும் படுத்துறங்கி உள்ளனர். ஆனால், ஆத்திரம் தீராத நாகமணி, நடுராத்திரியில் தூங்கிக் கொண்டிருந்த மகாலட்சுமியின் தலையில் ஆட்டுக்கல்லைத் தூக்கிப் போட்டு கொலைசெய்துள்ளார்.
மேலும் சம்பவம் நடைபெற்றபோது இருவரும் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காரமடை காவல் துறையினர், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக நாகமணியை கைதுசெய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பெற்ற தாயே, தலையில் ஆட்டுக்கல்லைப் போட்டு மகளைக் கொலைசெய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் ராணுவ வீரர் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை