கோயம்புத்தூர்: மாச்சம்பாளையத்தில், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த நபர், கடன் பிரச்னையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் மாச்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன் (32). இவர் திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும், சிஎன்சி ஆப்பரேட்டராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக கடன் பிரச்னையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
அதே சமயம் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் விளையாட்டின் மூலம் ஆன்லைன் வழியாகவே பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி புத்தகத்தை வைத்து கடன் வாங்கி விளையாடியதாக தெரிகிறது.
அவ்வாறு, கடன் வாங்கிய பணத்தையும் தோற்றுள்ளார். ஏற்கனவே கடன் தொல்லையில் தனிமையில் வசித்து வந்த அவர், ஆன்லைன் விளையாட்டின் மூலம் பணத்தை இழந்ததால் மனமுடைந்த நிலையில் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
![தற்கொலை செய்துகொண்ட ஜெயசந்திரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-04-suicide-for-online-game-issue-tn10027_03112020135455_0311f_1604391895_793.jpg)
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போத்தனூர் காவல் துறையினர், ஜெயசந்திரன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமி திடீர் தற்கொலை: 5 நாள்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு