சென்னை: திருமணமான ஐந்து மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் தற்கொலை செய்தது ஆர்.டி.ஓ விசாரணையில் தெரியவந்தது.
சென்னை, கே.கே நகரை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ (19). பி.காம் பட்டதாரியான இவருக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி, ஆவடியை சேர்ந்த பாலமுருகன் (29) என்பவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. பாலமுருகன் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு பாலமுருகனும் அவரது தாயார் அம்சாவும் சேர்ந்து, " கடன் வாங்கி வீட்டை கட்டி உள்ளோம். எனவே, எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. உனது பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி கொடு" என கூறி ஜோதிஸ்ரீயை கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதில் மனமுடைந்த ஜோதிஸ்ரீ பாலமுருகனை பிரிந்து டிசம்பர் மாதம் இறுதியே தனது தாயார் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில், ஏப்ரல் 4ஆம் தேதி ஜோதிஸ்ரீ திருமுல்லைவாயலில் உள்ள கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது மாமியார் அம்சா அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அதையும் மீறி ஜோதிஸ்ரீ வீட்டிற்குள் நுழைந்து, முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்றார்.
இதில் அத்திரமடைந்த அம்சா, முதல் மாடிக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தார். இதில் மனமுடைந்த ஜோதிஸ்ரீ, செல்போனில் வீடியோ பதிவிட்டும் கடிதம் ஒன்றை எழுதியும் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ மேற்பார்வையில், ஆவடி உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ஜோதிஸ்ரீ எடுத்த வீடியோவும் அவர் எழுதிய கடிதமும் கிடைத்தது. அந்த கடிதத்தில் எனது மரணத்திற்கு என் கணவர் பாலமுருகன், அவரது தாயார் அம்சா, உள்ளிட்ட எனது கணவரின் குடும்பத்தினரே காரணம் என எழுதியிருந்தார்.
இதனையடுத்து ஜோதிஸ்ரீ தற்கொலைக்கு காரணமான பாலமுருகன்(29), மாமியார் அம்சா (65), பாலமுருகனின் அண்ணன் சத்யராஜ்(35) ஆகியோரை திருமுல்லைவாயல் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பொது கிணற்றில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை