சென்னையில் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு நீக்கப்பட்டு, வணிக வளாகங்கள் திறக்கப்பட்ட பின்னர் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். ஆனால், அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காமல் முகக்கவசம் அணியாமல் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இதனால் பலருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சென்னை - தியாகராயநகர் மோதிலால் தெருவில் வசித்து வந்த 100 வயதான வைத்தியநாதனுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்துள்ளது. அதனைத் தாெடர்ந்து அக்டோபர் 4ஆம் தேதி, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
அதனைத் தொடர்ந்து 92 வயதான அவரது மனைவி ஜானகிக்கும் பரிசோதனைை செய்யப்பட்டதில் அவருக்கும் தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைப் பெற்று வந்த தம்பதியினர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த வைத்தியநாதன், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தனது 100ஆவது பிறந்தநாளை மருத்துவர்களுடன் கொண்டாடிய சம்பவம் பலரது கவனத்திற்கும் சென்றது.
இந்நிலையில், கரோனாவிலிருந்து குணமடைந்த வைத்தியநாதனின் அண்ணன் மகன் ஜெயசங்கரிடம் பேசும்போது, 'கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அரசின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தோம்.
ஊரடங்கு காலத்தில் பாதுகாப்புடன் தான் இருந்தோம். ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர், எங்கள் தெருவில் வாகனங்களை நிறுத்த வரும் நபர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அதுமட்டுமின்றி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் முகக்கவசம் இன்றி வருபவர்களுக்குத் தொற்று பரவியது. எங்கள் தெருவில் 50க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று ஏற்பட்டது. விழிப்புணர்வுடன் இருந்தும் தங்களுக்கு ஏற்பட்ட தொற்று பாதிப்பு தனது வயதான பெரியப்பா, பெரியம்மாவிற்கும் பரவியது. எனவே, பொது மக்கள் இனியாவது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்றார்.