சென்னை: கடந்த ஜூன் 30ஆம் தேதி மெட்ரோ ஏரிகளின் மொத்த நீர் இருப்பு ஆறாயிரத்து 672 மில்லியன் கியூபிக் அடியாக இருந்தது. ஜூலை 16ஆம் தேதி நிலவரப்படி ஏழாயிரத்து 96 மில்லியன் கியூபிக் அடியாக உயர்ந்தது.
செம்பரம்பாக்கம், ரெட் ஹில்ஸ், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தாலும், கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் நீர்வரத்து உயர்ந்துள்ளது. மேலும், பூண்டி ஏரிக்கு ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து 620 கன அடி கிருஷ்ணா நதிநீர் வந்துகொண்டிருக்கிறது.
மெட்ரோ ஏரிகளின் நீர் மட்டம்
இன்றைய நிலவரப்படி 140 மொத்த அடி கொண்ட பூண்டி ஏரி 130.56 அடியை எட்டியுள்ளது. 65.50 மொத்த அடி கொண்ட சோழவரம் ஏரி 60 அடியைத் தொட்டுள்ளது. இதேபோல 85.40 மொத்த அடி கொண்ட செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் 85.25 அடி நீர் இருப்பு உள்ளது.
சென்னையில் நேற்று (ஜூலை.18) நுங்கம்பாக்கத்தில் எட்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யார், சூலகிரியில் தலா 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
மேலும் உத்திரமேரூர், செய்யூரில் தலா ஒன்பது சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வந்தவாசியில் எட்டு சென்டிமீட்டரும், ஆரணி, நடுவட்டம் சின்னக்கல்லார் பகுதிகளில் தலா ஏழு சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு படி, ஜூலை 19, 21, 22 ஆகிய தேதிகளில் மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் லேசானது மழை முதல் கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 19ஆம் தேதியன்று கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும், ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!