சென்னை: பெரம்பூர் வழியாக இன்று பயணிகளை ஏற்றி வந்த மாநகரப் பேருந்தில் ஏறிய பெண் பயணி ஒருவருக்கும், பேருந்தின் நடத்துநருக்கும் இருக்கை தொடர்பான பிரச்சனையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் பெண் பயணி, நடத்துநர் இடையே கைகலப்பானது.
இதனால் பேருந்து நடு வழியில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற பயணிகள் கீழே இறங்கிய நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பயணி கீழே இறங்க மறுத்து, தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் சக பயணிகள் அந்த பெண் பயணியை தொடர்ந்து வசைபாடத் தொடங்கினர்.
சுற்றி நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் பெண் பயணி தொடர்ந்து நடத்துநரை ஆபாசமாகத் திட்டி தாக்கி வந்த நிலையில், பொறுமை இழந்த நடத்துநரும் பதிலுக்கு பெண் பயணியை தாக்கி கீழே இறங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
நடுவழியில் பேருந்து நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் காவல்துறையினர் பெண் பயணியையும், நடத்துநரையும் சமாதானப் படுத்தி நடுவழியில் நிறுத்தப்பட்ட பேருந்தை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.
மேலும், இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாகலாந்து சிறுமி தூத்துக்குடியில் மீட்பு!