சென்னை: விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவர் மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொண்டர்கள் யாரும் தனது பிறந்தநாள் அன்று தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2005ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய பிறந்த நாளை வறுமை ஒழிப்பு நாளாகத்தான் கடைப்பிடித்துவருகிறோம். 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவருக்கு' என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்காக உதவிகளைச் செய்துவருகிறோம்.
ஆனால் தற்போதுதான் கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில் பெரும் கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் இடர் உள்ளது. எனவே அனைவருடைய நலன் கருதி என்னுடைய பிறந்தநாள் அன்று தொண்டர்கள் யாரும் என்னைச் சந்திக்க வர வேண்டாம்" என்று அன்பு கட்டளை இட்டுள்ளார்.