சில தினங்களுக்கு முன் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவதாகக் கூறி அதற்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும் அரசு அலுவலர்களின் அனுமதியோடு பொருள்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
அரசின் இந்த அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் அவசர கால வழக்குகளை விசாரிக்கும் அமர்வின் முன்பு விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டது.
இதில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சில நிபந்தனைகளுடன் நிவாரணப் பொருள்கள் வழங்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
அதன்படி நிவாரணப் பொருள்களை விநியோகிப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன் சம்பந்தப்பட்ட மாவட்ட, மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், நிவாரணம் வழங்கும் இடத்திற்கு மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று மதிமுக சார்பில் வைகோ தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நேற்று திமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குக்குப் பிறப்பித்த அதே உத்தரவு இந்த வழக்குக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து உணவுப் பொருள்கள் வழங்கும் நேரத்தை மாலை நான்கு மணிவரை நீட்டிக்க வைகோ தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பொருள்களை வழங்கும் நேரத்திற்குள் அளிக்க முடிக்காவிட்டால் கூடுதலாக 2 மணி நேரம் வரை நீட்டிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாக விளக்கமளித்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: 'ஊரடங்கில் பதியப்படும் வழக்குகள் எதிர்காலத்தைப் பாழாக்கும்' - இளைஞர்களுக்கு ராமதாஸ் எச்சரிக்கை