சென்னை: சென்னை ஐஐடி மற்றும் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து புதிய முதுகலை பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளன. அதன்படி, முதல் முதுகலை பட்டப்படிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ளது.
அதேபோல், டேட்டா சயின்ஸ், எனர்ஜி சிஸ்டம்ஸ், பயோமெடிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கவும்; இரு கல்வி நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், முதல்வருமான ஆடம் டிக்கெல் ஆகியோர் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பேராசிரியர் ஆடம் டிக்கெல் சென்னை வந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேராசிரியர் ஆடம் டிக்கெல் கூறுகையில், "ஐஐடி மெட்ராஸ் மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகம் இடையேயான இந்த புதுமையான முதுகலைப் பட்டப்படிப்புகள், இரண்டு நாடுகளில் உள்ள மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற உதவும். இந்த பட்டப்படிப்புகள் இரு நாடுகளாலும் அங்கீகரிக்கப்படும்" என்றார்.
இதுகுறித்து பேசிய சென்னை ஐஐடி டீன் ரகுநாதன் ரெங்கசாமி, "இந்த கூட்டு முயற்சி, சென்னை ஐஐடிக்கு பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் நீண்ட பயணத்துக்கு வழிவகுக்கும் என நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க:பள்ளிகளில் கற்பித்தலை மேம்படுத்த ஐஐடியுடன் கைகோர்க்கும் பள்ளிக்கல்வித்துறை!