சென்னை: புதுவண்ணாரப்பேட்டை இளநிலை பொறியாளர், துரைப்பாக்கம் உதவி மின் பொறியாளர் இருவரும், சரிவர பணி மேற்கொள்ளாத காரணத்தால், தற்காலிகப்பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் கடந்த 8ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமைப்பொறியாளர்கள், சென்னை வடக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, தெற்கு-1, தெற்கு-2 உள்ளிட்ட மின் பகிர்மான வட்டங்கள் தொடர்புடைய மேற்பார்வைப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் ஆகியோர்களிடம் இதுவரை மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வில் சரிவர பணி மேற்கொள்ளாத சென்னை வடக்கு, புதுவண்ணாரப்பேட்டை மின்பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த இளநிலைப் பொறியாளர் எம்.சண்முகம் மற்றும் சென்னை தெற்கு 2 மின்பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த உதவி மின் பொறியாளர் வி.மகேஷ்வரி ஆகிய இருவரும் தற்காலிகப்பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்', எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நிலக்கரி தட்டுப்பாடு... தமிழ்நாட்டில் அவசர காலத் திட்டம் அவசியம்'