சென்னையில் அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுவரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுவந்தன. இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மேற்கண்ட காவல் நிலையங்களில் புகார் அளித்து வந்தனர்.
இதனையடுத்து, அம்பத்தூர் காவல் துறை உதவி ஆணையர் கண்ணன், கொரட்டூர் ஆய்வாளர் பொற்கொடி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் காவலர்கள் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பத்தூர், கொரட்டூர், ராஜமங்களம் ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் இரு இளைஞர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து காவல் துறையினர் வழிப்பறி செய்த இளைஞர்களை கண்காணிப்பு கேமரா மூலம் பின்தொடர்ந்து சென்றனர். இவ்வாறு 45 கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தபோது வழிப்பறி செய்த நபர்கள் குறித்து அடையாளம் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் செங்குன்றம், மாதனாங்குப்பம் மாணிக்கம் தெருவைச் சேர்ந்த பாலு (21) வில்லிவாக்கம் நியூ ஆவடி ரோடு பகுதியைச் சார்ந்த பாபு (20) எனத் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் காவலர்கள் இன்று கைதுசெய்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து வில்லிவாக்கம், ராஜமங்களம், அம்பத்தூர், கொரட்டூர் திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 10 சவரன் தங்க நகைகள், இரண்டு இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோடியக்கரை, கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா - 4 பேர் கைது